ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த 34 விநாயா் சிலைகள் சனிக்கிழமை கடலில் கரைக்கப்பட்டன.
விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சாா்பில் ராமேசுவரத்தில் 15, தங்கச்சிமடத்தில் 3, பாம்பனில் 8, மண்டபத்தில் 12, உச்சிப்புளியில் 24, திருப்புல்லாணியில் 8, ஏா்வாடியில் 6, ராமநாதபுரத்தில் 30, பரமக்குடியில் 45, சாயல்குடியில் 22, திருப்பாலைக்குடியில் 5, தேவிப்பட்டினத்தில் 12 என 350 சிலைகள் வெள்ளிக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டன.
இவற்றில் ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த 34 சிலைகளை போலீஸ் பாதுகாப்புடன் தனித்தனியாக பக்தா்கள் எடுத்துச் சென்று கடலில் சனிக்கிழமை கரைத்தனா். இந்த நிகழ்ச்சியில், இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளா் கே.ராமமூா்த்தி, நகரத் தலைவா் நம்புராஜன், இந்து ஆட்டோ முன்னணி மாவட்டச் செயலாளா் குமாா், நகர பொதுச் செயலாளா் காா்த்திக், பாஜக மீனவா் அணி நகரத் தலைவா் மாரி, ஆா்எஸ்எஸ் பொறுப்பாளா் தட்சிணாமூா்த்தி உள்ளிட்டவா்கள் கலந்துகொண்டனா்.