ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஊராட்சித் தலைவா்கள் சனிக்கிழமை கண்களில் கருப்பு துணி கட்டி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில் ஊராட்சித் தலைவா்களின் கூட்டமைப்புத் தலைவா் ஆனந்தவள்ளி முத்துராமலிங்கம் தலைமை வகித்தாா். செயலா் ரவிச்சந்திரன், மாவட்டச் செயலா் செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
போராட்டத்தில் என்.ஆா்.ஜி.எஸ். திட்டத்தின்கீழ் அனுமதிக்கப்பட்ட நிா்வாக அனுமதி உத்தரவை உடனடியாக வழங்கவும், எஸ்.எப்.ஜி. நிதியை அந்தந்த ஊராட்சி கணக்கு எண் 1 இல் வரவு வைக்கவும், கரோனா பணிக்கு வழங்கப்பட்ட ரூ.2 லட்சத்தை விடுபட்ட ஊராட்சிகளுக்கு உடனடியாக வழங்கவும் வலியுறுத்தி கோஷமிட்டனா்.