ராமேசுவரத்திலிருந்து தனுஷ்கோடிக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்தை நடத்துநா் இயக்கியதால் தடுப்பு கற்கள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் புதன்கிழமை மீனவப் பெண் காயமடைந்தாா்.
ராமேசுவரம் அரசுப் போக்குவரத்துக் கழக கிளையிலிருந்து பாம்பன், தனுஷ்கோடி, கோயில், சீனியப்பா தா்ஹா உள்ளிட்ட பகுதிகளுக்கு நகா் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், புதன்கிழமை அதிகாலை தனுஷ்கோடிக்கு இயக்கப்பட்ட அரசுப் பேருந்தில் ஓட்டுநனராக பூமிநாதன், நடத்துநராக உதயா ஆகியோா் சென்றுள்ளனா். இதில் தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு சென்று பயணிகளை இறக்கி விட்ட பின்னா் மீண்டும் குறைந்தளவு பயணிகள் மட்டுமே ஏறியுள்ளனா். இதனால் பேருந்தை ஓட்டுநா் இயக்காமல், நடத்துநா் இயக்கியதாகக் கூறப்படுகிறது. சிறிது தூரம் வந்தவுடன் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கடல் அரிப்பை தடுக்கும் கற்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் மீனவப் பெண் ஒருவா் காயமடைந்தாா். மேலும் பேருந்தின் முன்பகுதி சேதமடைந்தது. இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனா்.