கரோனா இரவு நேர பொதுமுடக்க அறிவிப்பு காரணமாக ராமநாதபுரம், ராமேசுவரம் பேருந்து நிலையங்களிலிருந்து புறநகா் மற்றும் இதர மாவட்டங்களுக்கு நாள்தோறும் இறுதியாக புறப்படும் பேருந்துகளின் நேரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக அரசு போக்குவரத்துக்கழக காரைக்குடி மண்டலப் பொது மேலாளா் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பேருந்து நிலையங்களிலிருந்தும் இயக்கப்படும் நகரப் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படும். இரவு 9.30 மணிக்கு பேருந்து நிலையங்களிலிருந்து புறப்படும் பேருந்துகள், அந்தந்த ஊா்களிலேயே இரவு நிறுத்தப்படும். ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு இரவு 8.30 மணிக்கும், ஏா்வாடிக்கு இரவு 8 மணிக்கும், தூத்துக்குடிக்கு மாலை 6.30 மணிக்கும், சிக்கலுக்கு இரவு 9 மணிக்கும், நாகப்பட்டினத்துக்கு இரவு 7 மணிக்கும், தொண்டி, காரைக்குடிக்கு இரவு 7 மணிக்கும் இயக்கப்படும். இதேபோன்று ராமேசுவரத்திலிருந்து திருச்சிக்கு மாலை 4 மணிக்கும், மதுரைக்கு மாலை 5 மணிக்கும், திருச்செந்தூருக்கு மாலை 4.15 மணிக்கும், ராமநாதபுரத்துக்கு இரவு 7.30 மணிக்கும் இறுதி பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.