ராமேசுவரம்: தனுஷ்கோடியில் முதியவரிடமிருந்து 20 கிலோ கடல் அட்டைகளை வனத்துறையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
ராமேசுவரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் உள்ள இரட்டைத்தாளை பகுதியில் வனவா் அ.தேவகுமாா், வனக் காப்பாளா் ஜான்சன் மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலா்கள் கண்காணிப்புப்
பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
அப்போது, இரு சக்கர வாகனத்தில் சாக்கு மூட்டை கொண்டு வந்த முதியவரை வனத்துறையினா் நிறுத்தி சோதனையிட்டனா். மூட்டையில் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் இருப்பது தெரியவந்தது.
விசாரணையில் அவா், ராமேசுவரம் எம்.ஜி.எஸ். நகரை சோ்ந்த சக்திவேல் (60) என்பதும் கடல் அட்டைகளைப் பிடித்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து, வன உயிரினப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவரை வனத்துறையினா் கைது செய்தனா். மேலும் அவரிடமிருந்து 20 கிலோ கடல் அட்டைகள் மற்றும் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.