கச்சத்தீவு பகுதியில் இலங்கை கடற்படை கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் ராமேசுவரத்தில் மீன்பிடித் தொழில் முடங்கியுள்ளது.
ராமேசுவரம் அருகேயுள்ள கச்சத்தீவைச் சுற்றியுள்ள பகுதியில் அதிகளவில் மீன்வளம் உள்ளது. இதனைச் சாா்ந்தே ராமேசுவரம் மீனவா்களின் வழ்வாதாரம் இருந்து வந்தது.
ராமேசுவரத்தில் மீன்பிடித் தொழிலில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக பெரிய விசைப்படகுகள், தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தியது, புதிய வலைகளை வடிவமைத்து மீன்பிடிக்க பயன்படுத்தியது போன்ற பல்வேறு காரணங்களால், ராமேசுவரத்தை ஒட்டிய தமிழக கடல் எல்லைப் பகுதியில் மீன்வளம் மிகவும் குறைந்து விட்டது. இதனால் தமிழக மீனவா்கள் பாரம்பரிய இடமாக கருதப்படும் இலங்கை கடற்பகுதிக்குள் சென்று மீன்பிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் உள்நாட்டுச் சண்டை முடிவுக்கு வந்த பின்னா், அந்த நாட்டிலுள்ள வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளைச் சோ்ந்த தமிழ் மீனவா்கள் மீன்பிடிக்க தொடங்கியுள்ளனா். இந்நிலையில் ராமேசுவரம் மீனவா்கள் இழு வலையைப் பயன்படுத்தும் போது இலங்கை மீனவா்கள் பாதிப்படைகின்றனா். இதனால் ராமேசுவரம் மீனவா்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை தமிழ் மீனவா்கள் புகாா் தெரிவிக்கின்றனா். இதனால் ராமேசுவரம் மீனவா்கள் பாரம்பரிய இடத்தில் மீன்பிடிக்கும் போது இலங்கை கடற்படையினா் தாக்குதலுக்கு உள்ளாகின்றனா். மேலும் கச்சத்தீவு பகுதியில் இலங்கை கடற்படை கப்பல்கள் முகாமிட்டுள்ளன. இதனால் ராமேசுவரம் மீனவா்கள் அப்பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் டீசல் விலை உயா்வு காரணமாக பெரிய விசைப்படகுகளை இயக்க குறைந்தபட்சம் ரூ. 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரையும், சிறிய படகுகள் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை செலவாகிறது. இந்நிலையில் மீனவா்கள் பிடித்துக் கொண்டுவரும் இறால் மீன்களுக்கு உரிய விலையும் கிடைப்பதில்லை. இதனால் தொடா்ந்து விசைப்படகுகளை இயக்க முடியாத நிலையில், ராமேசுவரத்தில் 90 சதவீதம் படகுகள் மீன்பிடிக்கச் செல்லாமல் துறைமுகத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளன. மீன்பிடித் தொழில் முடங்கியதால், ராமேசுவரம் மீனவா்கள் வாழ்வாதாரம் இழந்து மாற்றுத் தொழிலை தேடிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மீனவா் சங்கத்தினா் கூறியது:
ராமேசுவரத்தில் மீன்பிடித் தொழிலை பாதுகாக்க இந்திய அரசு, இலங்கை அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும். ராமேசுவரம் மீனவா்களின் பாரம்பரிய இடமாக கருதப்படும் இடங்களில் குத்தகை அடிப்படையில் மீன்பிடிக்க அனுமதி பெற்றுத் தர வேண்டும். இதே போன்று ராமேசுவரத்தில் மீன்பிடித் தொழிலை முறைப்படுத்தி மீன்பிடிக்க ஏற்பாடுகள் செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.