ராமநாதபுரம் அருகே செவ்வாய்க்கிழமை தண்டவாளத்தில் கிடந்த ஆண் சடலத்தை ரயில்வே பாதுகாப்பு படையினா் கைப்பற்றினா்.
ராமநாதபுரத்திலிருந்து ராமேசுவரம் நோக்கி பயணிகள் ரயில் செவ்வாய்க்கிழமை பகல் 11.30 மணிக்கு சென்றுகொண்டிருந்தது. ரயில் நாகாச்சி பகுதியைக் கடந்துசென்ற நிலையில், அங்கு ஆண் சடலம் கிடப்பதாக ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. அப்படையினா் விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். விசாரணையில், இறந்தவா் நாகாச்சி அருகேயுள்ள வெள்ளமாசி வலசையைச் சோ்ந்த ஞானசேகரன் (55) என்பது தெரியவந்தது. கூலி தொழிலாளியான அவா் தண்டவாளத்தைக் கடக்கும்போது ரயில் மோதி உயிரிழந்தாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா என ரயில்வே போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.