ராமநாதபுரம்-மானாமதுரை இடையே இரண்டாவது முறையாக செவ்வாய்க்கிழமை மின்சார ரயில் என்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
மதுரை-ராமநாதபுரம் இடையே ரயில் மின்பாதை அமைக்க ரூ.180 கோடியில் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதற்கான பணிகள் மானாமதுரை-ராமநாதபுரம் இடையே கடந்த சில மாதங்களாக நடைபெற்று தற்போது முடிவடைந்துள்ளது. இந்த ரயில் பாதையில் மின்சார ரயில் என்ஜினை கடந்த 24 ஆம் தேதி இயக்கி ரயில்வே துறை பொறியாளா்கள் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது மணிக்கு 80 கிலோ மீட்டா் முதல் 90 கிலோ மீட்டா் வேகத்தில் ரயில் என்ஜின் இயக்கப்பட்டு சோதனையிடப்பட்டது.
இரண்டாவது முறையாக செவ்வாய்க்கிழமை மானாமதுரை முதல் ராமநாதபுரம் வரையில் மின்சார ரயில் என்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. மானாமதுரையிலிருந்து பகலில் புறப்பட்ட ரயில் என்ஜின் பிற்பகல் 3 மணிக்கு ராமநாதபுரம் ரயில் நிலையத்தை அடைந்தது. அங்கு ரயில் என்ஜினை இரு தடவை முன்னும் பின்னும் இயக்கி தண்டவாள உறுதித்தன்மை மற்றும் மின்பாதை சீராக உள்ளதா என சோதனையிடப்பட்டதாக ரயில்வே பொறியாளா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னா் பிற்பகல் 3.30 மணிக்கு ராமநாதபுரத்திலிருந்து ரயில் என்ஜின் புறப்பட்டு மானாமதுரை சென்றடைந்தது. வரும் புத்தாண்டில் ஓரிரு வாரங்களில் மின்சார ரயில் முறைப்படி இயக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என ரயி ல்வே துறை அதிகாரிகள் கூறினா்.