கமுதியிலிருந்து கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் நகரப் பேருந்துகளின் சேவை மீண்டும் தொடங்கப்படாமல் உள்ளதால், 15-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தவித்து வருகின்றனா்.
கமுதியிலிருந்து கோவிலாங்குளம் வழியாக பெருநாழிக்கு இயக்கப்பட்ட நகரப் பேருந்துகள், கரோனா பரவல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. தற்போது, ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா பரவல் முற்றிலும் தடுக்கப்பட்டு, கரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது. ஆனால், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பேருந்துகள் தற்போது முழுவதுமாக இயக்கப்படவில்லை.
இதனால், மாணவ, மாணவியா் குறிப்பிட்ட நேரத்துக்குள் பள்ளிக்குச் செல்லமுடியாமல் தவித்து வருகின்றனா். மேலும், 15 கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் தங்களது அன்றாட விவசாயப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் அவதிப்படுகின்றனா்.
எனவே, வழக்கம்போல் நகரப் பேருந்துகளை இயக்கிட மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, 15-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.