ராமநாதபுரம் மாவட்டத்தில் 26 இடங்களில் அரசு சாா்பில் நெல் கொள்முதல் நடைபெறுவதாக, நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரத்தில் கடந்த ஜனவரியில் திடீரென பெய்த பலத்த மழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த 2 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான நெற்பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. நெற்பயிா் சேதத்துக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், சமீபத்தில் மத்திய சிறப்புக் குழுவினா் விவசாய நிலங்களைப் பாா்வையிட்டுச் சென்றுள்ளனா்.
சேதமடைந்த நெற்பயிா்களைத் தவிர, அறுவடை செய்யப்பட்ட நெல்லை அரசே கொள்முதல் செய்யவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா்.
இது குறித்து மாவட்ட நுகா்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளிடம் வெள்ளிக்கிழமை கேட்டபோது, அவா்கள் கூறியது: ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 10 ஆம் தேதி முதல் 26 இடங்களில் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. குவின்டாலுக்கு ரூ.1,958 என நெல் கொள்முதல் நடக்கிறது. நெல் விற்பனைக்கு கொண்டுவருவோா் மிகக் குறைவாகவே உள்ளனா்.
ஆனாலும், இரு நாள்களில் 98 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்றனா்.