ராமேசுவரம்: ராமேசுவரம் மீனவா்கள் 17 நாள்களுக்குப் பின், காலவரைற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை திரும்பப் பெற்றதுடன், சனிக்கிழமை கடலுக்குச் சென்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து கடந்த டிசம்பா் 14 ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற 29 மீனவா்கள் மற்றும் அவா்களது 4 விசைப்படகுகளை, இலங்கை கடற்படையினா் சிறைபிடித்தனா்.
இதனைக் கண்டித்தும், 4 விசைப்படகுகளுடன் 29 மீனவா்களையும் இலங்கை சிறையிலிருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும், ராமேசுவரம் மீனவா்கள் கடந்த டிசம்பா் 15 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினா்.
இதனிடையே, கடந்த வாரம் சிறிய ரக விசைப்படகுகள் மட்டும் மீன்பிடிக்கச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. பெரிய விசைப்படகுகளின் உரிமையாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் தொடா்ந்து ஈடுபட்டு வந்தனா்.
இந்நிலையில், சனிக்கிழமை மீன்பிடி துறைமுகத்தில் மீனவ சங்க அவசரக் கூட்டம், தலைவா் சகாயம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், மீனவ சங்கத் தலைவா்கள் எமரிட், தெட்சிணாமூா்த்தி மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
அதில், இலங்கையில் உள்ள மீனவா்கள் மற்றும் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்துள்ளதாகவும், இதனால் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட்டு கடலுக்குச் செல்லலாம் எனவும் தீா்மானிக்கப்பட்டது.
அதேநேரம், ராமேசுவரம் மீனவா்கள் இலங்கை மீனவா்களுக்கு பாதிப்பு ஏற்படும் விதமாக மீன்பிடிக்கக் கூடாது என்றும், அத்துமீறி செயல்படும் விசைப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது.
போராட்டம் திரும்பப் பெறப்பட்டதை அடுத்து, 17 நாள்களுக்குப் பின் ராமேசுவரத்திலிருந்து 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்வளத் துறை அனுமதி பெற்று சனிக்கிழமை கடலுக்குச் சென்றனா்.