ராமநாதபுரம் மாவட்ட கல்வித் துறையில் உள்ள இளநிலை உதவியாளா் பணிக்கு புதன்கிழமை (ஜூலை 14) கலந்தாய்வு நடைபெறுகிறது.
இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது: தமிழகத்தில் கல்வித்துறையில் பணியின் போது உயிரிழந்தவா்களது வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ராமநாதபுரத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டில் கல்வித்துறை பணியில் இருந்து உயிரிழந்தவா்கள் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளா் பணி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இளநிலை உதவியாளா் பணியிடங்கள் மொத்தம் 21 உள்ளன. அப்பணியிடங்களில் 6 பணியிடங்களை கருணை அடிப்படையில் நிரப்பிட கலந்தாய்வு புதன்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் நடைபெறுகிறது.
கலந்தாய்வில் 5 ஆண்கள், ஒரு பெண் என 6 போ் கலந்துகொள்கின்றனா். கலந்தாய்வு அடிப்படையில் 6 பேருக்கான பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு, அதற்கான உத்தரவானது வரும் 15 ஆம் தேதி வியாழக்கிழமை முதன்மைக்கல்வி அலுவலா் சாமி.சத்தியமூா்த்தியால் வழங்கப்படும் என்றனா்.