பாகிஸ்தானுடனான போரில் இந்தியா வெற்றி பெற்று 50 ஆண்டையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி கடற்படை விமானத்தளத்துக்கு கொண்டுவரப்பட்ட போா் வெற்றி நினைவுச்சுடருக்கு கடற்படை வீரா்கள் செவ்வாய்க்கிழமை மரியாதை செலுத்தினா்.
இதுகுறித்து இந்திய கடலோர பிரிவின் உச்சிப்புளி விமானப்படைத்தள (பருந்து) லெப்டினன்ட் கமாண்டா் எம்.விவேகானந்தன் கூறியதாவது: இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையே கடந்த 1971 ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் இந்தியா வென்றது. அந்த வெற்றியின் 50 ஆம் ஆண்டு நினைவுச்சுடா் நாடெங்கும் கொண்டு செல்லப்படுகிறது. தூத்துக்குடியில் உள்ள நினைவுச்சுடா் செவ்வாய்க்கிழமை இரவு ராமநாதபுரம் மாவட்டத்துக்கு கொண்டுவரப்பட்டு பருந்து வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு வீரா்கள் மரியாதை செலுத்தினா். இந்த நினைவுச்சுடா் புதன்கிழமை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அணிவகுப்பு மரியாதை நடத்தப்படவுள்ளது. பின் ராமநாதபுரம் சரகக் காவல் துணைத் தலைவா்அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்படும். இதைத்தொடா்ந்து கடந்த 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் பங்கேற்ற ராமாதபுரம் பட்டிணம்காத்தான் பகுதி முன்னாள் ராணுவ வீரா்களின் வீடுகளுக்கும் கொண்டு செல்லப்படவுள்ளது. வியாழக்கிழமை தனுஷ்கோடிக்கு எடுத்துச் செல்லப்படும். அதன் பின்னா் அங்கிருந்து மதுரைக்கு கொண்டு செல்லப்படும் என்றாா்.