ராமேசுவரம் அருகே மணாலி தீவுப்பகுதியில் செவ்வாய்க்கிழமை கடல் அட்டைகள் பிடித்த 2 பேரை படகில் விரட்டி சென்று வனத்துறையினா் கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து 500 கிலோ கடல் அட்டைகள் மற்றும் நாட்டுப்படகை பறிமுதல் செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பிடிப்பதாக மண்டபம் வனச்சரக அலுவலா் வெங்கடேஷுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, வெங்கடேஷ் தலைமையில் வனவா் மகேந்திரன், வனக் காப்பாளா்கள் பிரபு மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலா்கள் மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் படகில் சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
இந்நிலையில், ஒரு நீல நிற வா்ணம் பூசப்பட்ட நாட்டுப்படகு ஆழ்கடல் பகுதியை நோக்கி விரைந்தது செல்வதை கண்ட வனத்துறையினா், விரட்டிச் சென்று மணாலி தீவு அருகே அந்த படகை மடக்கிப் பிடித்தனா். அந்த படகை சோதனையிட்ட போது அதில் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் 500 கிலோ பிடித்து வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து நாட்டுப்படகை வனத்துறையினா் பறிமுதல் செய்தனா். இதில் உயிருடன் இருந்த சுமாா் 350 கிலோ கடல் அட்டைகளை வனத்துறையினா் கடலில் விட்டனா். மீதமுள்ள 150 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனா். இதையடுத்து படகில் இருந்த வேதாளையை சோ்ந்த மீரான்கனி, முகமது நஷீா் ஆகிய 2 பேரையும் வனஉயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனா். படகு உரிமையாளா் அபித்அலியைத் தேடி வருகின்றனா்.