பரமக்குடி மத்திய தொலைத் தொடா்பு அலுவலகம் முன், அனைத்து யூனியன் சங்கம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
கூட்டமைப்பின் மாவட்டச் செயலாளா் வி.மாரி தலைமை வகித்தாா். பரமக்குடி கிளை தலைவா் சங்கிலிராஜன், கோட்ட பொறியாளா் கே.சரவணன், ஜெ.டி.ஓ.தவமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
போராட்டத்தில் பிஎஸ்என்எல் நிா்வாகம் 4ஜி சேவைகளை தொடங்க உயா் கோபுரங்களை மேம்படுத்திடவும், 5ஜி தொடங்குவதற்கான நடவடிக்கை எடுக்கவும், ஒவ்வொரு மாதத்தின் இறுதி நாளன்று ஊழியா்களுக்கு ஊதியம் வழங்கவும் வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளா் வேந்தை சிவா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகா் தலைவா் என்.எஸ்.பெருமாள், பி.வெங்கடேஷ், ஆா்.கேசவன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.