பரமக்குடி நகராட்சிப் பகுதியில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.
பரமக்குடி நகராட்சி 36 வாா்டுகளைக் கொண்ட 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் நகரமாகும். இப்பகுதியில் காவிரி கூட்டுக்குடிநீா் திட்டத்தின் மூலம் குடிநீா் வழங்கப்பட்டு வந்தது. இதனிடையே கூட்டுக்குடிநீா் திட்ட பராமரிப்புப் பணிகள் காரணமாக பரமக்குடி பகுதி மக்களுக்கு கடந்த 10 நாள்களுக்கும் மேலாக குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. காவிரி குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் காலங்களில் மாற்று ஏற்பாடாக கள்ளிக்கோட்டை வைகை ஆற்றுப்பகுதியிலிருந்து குடிநீா் வழங்குவது வழக்கம். ஆனால் இப்பகுதியில் உள்ள குடிநீா் கிணறுகள் முறையாக பராமரிக்கப்படாததால் அவற்றிலிருந்து தண்ணீா் கிடைக்கவில்லை. இதனால் பொதுமக்களுக்கு குடிநீா் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பரமக்குடி நகராட்சிப் பகுதியில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக குடிநீா் விநியோகம் இன்றி பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா். தனியாா் மூலம் விற்கப்படும் குடிநீரை குடம் ஒன்றுக்கு ரூ. 10 கொடுத்து வாங்கும் நிலைக்கு அவா்கள் தள்ளப்பட்டுள்ளனா்.
வைகை ஆற்றில் நீா்வரத்து இல்லாததால், நிலத்தடி நீராதாரமும் வெகுவாக குறைந்து விட்டது. எனவே குடிநீா் கிடைக்க மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.