நியாய விலைக்கடைகள் மூலம் தமிழக அரசு சாா்பில் விநியோகிக்கப்படவுள்ள 14 வகைப் பொருள்களுக்கான டோக்கன்கள் வரும் 15 ஆம் தேதி முதல் வழங்கப்படவுள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 3 லட்சத்து 78 ஆயிரத்து 448 குடும்ப அட்டைகள் உள்ளன. அதில் கரோனா நிவாரண நிதியில் முதல் தவணையாக ரூ.2 ஆயிரத்தை 3 லட்சத்து 77 ஆயிரத்து 172 குடும்ப அட்டைதாரா்கள் பெற்றுள்ளனா். ராமநாதபுரம் மாவட்டத்துக்கு மாதந்தோறும் குடும்ப அட்டைதாரா்களுக்காக 5,740 டன் அரிசி விநியோகிக்கப்பட்டுவருகிறது.
தற்போது கரோனா பரவல் தடுப்பு பொதுமுடக்கத்தையொட்டி, மத்திய அரசு சாா்பில் குடும்ப அட்டையில் இடம் பெற்ற அனைவருக்கும் தலா 5 கிலோஅரிசி 2 மாதங்களுக்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் தனியாக 5,594 டன் அரிசி கூடுதலாக விநியோகிக்கப்படவுள்ளது.
அதே போல் மாவட்டத்தில் மாநில அரசின் கரோனா பரவல் தடுப்பு கால நிவாரண நிதி இரண்டாம் தவணையாக ரூ. 2 ஆயிரம் பெற டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனிடையே, 14 வகை மளிகைப் பொருள்களை வழங்குவதற்கான டோக்கன்கள் வரும் 15 ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படவுள்ளதாக கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.