ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்தது. தற்போது அந்த அலுவலகம் புதுப்பிக்கப்பட்டு செயல்படுவதற்கான பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் செயல்பட்டுவருகிறது. அங்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டது. இதில் அலுவலகம் முற்றிலும் சேதமடைந்தது. எனவே இவ்அலுவலகம் அதே கட்டடத்தின் முதல் தளத்தில் செயல்பட்டுவருகிறது.
தீவிபத்து ஏற்பட்ட கட்டடத்தை புதுப்பிக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடந்த நிலையில் தற்போது நிறைவடைந்துள்ளது. இதையடுத்து திங்கள்கிழமை அலுவலகத்தில் மீண்டும் முதன்மைக் கல்வி அலுவலகச் செயல்பாடுகளைத் தொடங்கும் வகையில் பூஜைகள் நடைபெற்றன. இதில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி.சத்தியமூா்த்தி மற்றும் கல்வி மாவட்ட அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.