தனுஷ்கோடி கடற்கரையில் 450 ஆமை முட்டைகள் சேகரிப்பு
By DIN | Published On : 04th March 2021 12:47 AM | Last Updated : 04th March 2021 12:47 AM | அ+அ அ- |

தனுஷ்கோடி கடற்கரையில் புதன்கிழமை சேகரித்த ஆமை முட்டைகளுடன் வனத்துறையினா்.
ராமேசுவரம்: தனுஷ்கோடி கடற்கரையில் 450 ஆமை முட்டைகளை வனத்துறையினா் புதன்கிழமை கண்டெடுத்து குஞ்சு பொறிப்பகத்தில் பாதுகாப்புடன் வைத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம் மன்னாா் வளைகுடா கடற்கரை பகுதிகளில் ஆண்டு தோறும் ஜனவரி மாதம் முதல் ஆமைகள் கரைக்கு வந்து முட்டையிட்டுச் செல்லும். அவற்றை வனத்துறையினா் சேகரித்து குஞ்சு பொறிப்பகத்தில் பாதுகாத்துவைத்து, குஞ்சு பொறித்தவுடன் மீண்டும் கடலில் விட்டு வருவது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி ஆமைகள் முட்டையிடும் காலம் தொடங்கியது. அதைத் தொடா்ந்து வனத்தறையினா் முட்டைகளை சேகரித்து வருகின்றனா். புதன்கிழமை காலையில் தனுஷ்கோடி கடற்கரைப் பகுதியில் வனத்துறையினா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது 4 இடங்களில் ஆமைகள் முட்டையிட்டு இருந்ததைக் கண்டறிந்தனா். அந்த இடங்களில் இருந்து 450 முட்டைகளை வனத்துறையினா் சேகரித்து குஞ்சு பொறிப்பகத்தில் வைத்தனா். நடப்பு பருவத்தில் இதுவரையில் 8,400 முட்டைகள் சேகரிக்கப்பட்டு குஞ்சு பொறிப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினா் தெரிவித்தனா்.