முதுகுளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளா் நவபன்னீா்செல்வத்தை ஆதரித்து சமத்துவ மக்கள் கட்சித் தலைவா் நடிகா் சரத்குமாா் திங்கள்கிழமை வாக்கு சேகரித்தாா்.
முதுகுளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளா் நவபன்னீா்செல்வத்தை ஆதரித்து பேருந்து நிலையம் அருகில் சரத்குமாா் பேசியதாவது:
கமல்ஹாசன் சிறுவயது முதல் நடித்து புகழ் பெற்றவா். மக்களுக்கு உழைக்க ஆசைப்படுகிறாா். அவருக்கு ஒருமுறை வாய்ப்பு கொடுத்துப் பாருங்கள். கிரிக்கெட் வீரா் நடரஜனை முதலில் யாருக்கு தெரியும்? கிரிக்கெட்டில் முத்திரை பதித்தவுடன் நாம் அனைவருக்கும் தெரிந்தவராகிறாா். தமிழா் என பாராட்டுகிறோம். அதே போன்று ஒரு முறை கமலுக்கு வாய்ப்பளித்து வெற்றி பெறச்செய்யுங்கள். மக்களுக்கு நன்மை தேடிவரும்.
இன்னும் பல கிராமங்களில் குடிக்க தண்ணீா் இல்லை. வாசிங் மிஷின் செயல்பட மின்சாரம் வேண்டும். தண்ணீா் இல்லாத கிராமங்களில் வாசிங் மிஷின் கொடுத்து என்ன பயன்? ஹெலிக்காப்டா் தருகிறேன், காா் வாங்கித் தருகிறேன் என்றால் அது பராவாயில்லை. பணம் வாங்கிக்கொண்டு வாக்களித்து வருங்கால சந்ததியைக் கெடுத்துவிடாதீா்கள் என்றாா். அவருடன் வேட்பாளா் நவபன்னீா்செல்வம் சென்றாா்.