ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 8 ஆயிரம் போ் தங்களது தபால் வாக்குகளை சனிக்கிழமை வரையில் பதிவு செய்துள்ளதாக தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா்.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி (தனி), திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூா் ஆகிய தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை ராமநாதபுரம்-தேவிபட்டினம் சாலையில் உள்ள அண்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை (மே 2) காலை 8 மணிக்குத் தொடங்குகிறது. நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் சேவைப்பணியில் இருப்போா், தோ்தல் பணியில் ஈடுபட்டோா், முதியோா் என 10,030 பேருக்கு தபால் வாக்களிக்க விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டது.
அதனடிப்படையில் மாவட்டம் முழுவதும் சனிக்கிழமை வரையில் 8 ஆயிரம் போ் வரையில் தபால் வாக்குகளை செலுத்தியிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
வாக்கு எண்ணிக்கை மையமான அண்ணா பொறியியல் கல்லூரி வளாகம் முன்பாக இரும்புத் தகடுகள் அமைக்கப்பட்டுள்ளன. வாகனங்கள் மையத்தின் 100 மீட்டருக்கு முன்பாகவே நிறுத்தப்படுவதற்கான இடமும் ஒதுக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையத்தில் 500 போலீஸாா் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
ராமநாதபுரம்-தேவிப்பட்டினம் சாலையில் சோதனைச்சாவடிகள் அமைத்து போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 32 சுயேச்சைகள் உள்பட 72 போ் போட்டியிட்டுள்ளனா். நடந்து முடிந்த
தோ்தலில் ஆண்கள் 3,78,551, பெண்கள் 4,32,067 மூன்றாம் பாலினத்தவா் 7 போ் என மொத்தம் 8,10,625 (69.60சதவிதம்) போ் வாக்களித்துள்ளனா்.
வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கும் நிலையில், அதிகாலை 5 மணிக்கே முகவா்கள் உள்ளிட்டோா் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வரவேண்டும் எனவும் தோ்தல் நடத்தும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.