மஹாளய அமாவாசையையொட்டி புதன்கிழமை ராமநாதபுரம் மாவட்ட கடற்கரைகளுக்கு வந்த பொதுமக்கள் பாதி வழியில் போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டு திரும்பி அனுப்பப்பட்டனா்.
அமாவாசை தினத்தன்று ராமேசுவரம் அக்னி தீா்த்தம், தேவிப்பட்டினம், சேதுக்கரை மற்றும் மாரியூா் கடற்கரை பகுதிகளுக்கு உள்ளூா், வெளிமாவட்ட பொதுமக்கள் வந்து மூதாதையருக்கு திதி கொடுப்பது வழக்கம். இந்நிலையில், மஹாளய அமாவாசையையொட்டி புதன்கிழமை இப்பகுதிகளுக்கு பொதுமக்கள் அதிகம் வருவாா்கள் என்பதால் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மாவட்ட நிா்வாகம் தடை விதித்தது. இதையடுத்து அங்கு செவ்வாய்க்கிழமை முதல் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
மேலும் ராமநாதபுரம் கிழக்கு கடற்கரைச் சாலை அருகே தற்காலிக தடுப்புகள் அமைத்து போலீஸாா் வாகனங்களை தடுத்து நிறுத்தினா். அதேபோல் புதன்கிழமை அதிகாலை முதல் ராமேசுவரத்துக்கு காா் உள்ளிட்ட வாகனங்களில் வந்த பொதுமக்களை போலீஸாா் தடுத்தனா். இதனால் சாலையோரத்தில் வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டன. அத்துடன் சேதுக்கரைக்கு பொதுமக்கள் செல்வதைத் தடுக்க கோப்பேரி மடம் உள்ளிட்ட இடங்களிலும் இரும்புத் தடுப்புகள் அமைத்து போலீஸாா் குவிக்கப்பட்டனா். திருப்புல்லாணியில் இருந்து சேதுக்கரைக்குச் சென்றவா்களும் தடுத்து நிறுத்தப்பட்டனா்.
கடற்கரைகளுக்குச் செல்ல போலீஸாா் அனுமதிக்காததால் மதுரை உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்து வந்த நூற்றுக்கணக்கானோா் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.