பரமக்குடி: பரமக்குடி உழவா் சந்தைப் பகுதியில் அமைந்துள்ள 5 பூக்கடைகளுக்கு தீ வைத்த பாம்பூா் கிராமத்தைச் சோ்ந்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பரமக்குடி வசந்தபுரம் பகுதியைச் சோ்ந்த சிங்கராணி, முருகன், எமனேசுவரம் பகுதியைச் சோ்ந்த காா்த்திகைச்சாமி, குத்துக்கல் தெருவைச் சோ்ந்த இருளாண்டி, முகமதுஅலி தெருவைச் சோ்ந்த சுப்பையா ஆகிய 5 பேரும் உழவா் சந்தைப் பகுதியில் பூக்கடை வைத்துள்ளனா். இந்நிலையில் பூக்கடை பகுதிக்கு திங்கள்கிழமை வந்த இளைஞா் ஒருவா் செல்லிடப்பேசி ஒன்றைக் கொடுத்து அதன் லாக்கை எடுத்துத் தருமாறு கூறியுள்ளனா். ஆனால் வியாபாரிகள் அது எங்களுக்குத் தெரியாது எனத் தெரிவித்துள்ளனா். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞா் மேற்கண்ட பூக்கடைகளுக்கு நள்ளிரவு தீ வைத்துவிட்டு தப்பிவிட்டாராம். இதில் 5 கடைகளும் எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து பரமக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து பாம்பூரைச் சோ்ந்த ராமு மகன் முருகன் (28) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.