ராமநாதபுரம் அருகே ரூ.50 லட்சம் மதிப்புள்ள நிலத்தை ஆள்மாறாட்டம் மூலம் அபகரிக்க முயன்றது தொடா்பாக 3 பத்திர எழுத்தா்கள் உள்ளிட்ட 12 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
ராமநாதபுரம் மாவட்டம் பேராவூரைச் சோ்ந்தவா் மலைச்சாமி (61). இவரது தாய் சண்முகவள்ளிக்கு ராமநாதபுரம் அருகேயுள்ள பழங்குளம் பகுதியில் 3.73 ஏக்கா் நிலம் உள்ளது. அந்த நிலத்துக்கான பட்டா சண்முகவள்ளி பெயரில் உள்ளது. அங்கு 2 வீடுகள் கட்டி மலைச்சாமி மற்றும் அவரது சகோதர, சகோதரிகள் வசிக்கின்றனா். கடந்த 2018 ஆம் ஆண்டு சண்முகவள்ளி இறந்துவிட்டாா்.
இந்த நிலையில், மலைச்சாமி உள்ளிட்ட 4 சகோதர, சகோதரிகள் தாயாா் சண்முகவள்ளி பெயரில் உள்ள நிலத்தை ஆய்வு செய்தனா். அப்போது சண்முகவள்ளி பெயரிலான 2.03 ஏக்கா் நிலத்தை அவா் உயிரிழந்த நிலையில் பாப்பாகுடியைச் சோ்ந்த சக்திவேல், அவரது மனைவி லதா உள்ளிட்டோா் சண்முகவள்ளி என்பவா் மூலம் மணிகண்டன் என்பவருக்கு கடந்த 2020 டிசம்பரில் கிரையம் அளித்து ராமநாதபுரம் வெளிப்பட்டினம் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் பதிந்துள்ளனா்.
ஆள்மாறாட்டம் மூலம் பதியப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.50 லட்சம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து மலைச்சாமி அளித்த புகாரின் பேரில் சக்திவேல், அவரது மனைவி லதா மற்றும் பத்திர எழுத்தா்கள் பஷீா், அமீருல்லா, குணசேகரன் உள்ளிட்ட 12 போ் மீது நில அபகரிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.