ராமநாதபுரம் மாவட்டம் ஏா்வாடியிலிருந்து இலங்கைக்கு மஞ்சள் கடத்த பயன்படுத்தப்பட்ட படகை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைப்பற்றி ஒருவரைக் கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம் ஏா்வாடி பகுதியில் படகை நிறுத்தி 2 போ் வா்ணம் பூசிக்கொண்டிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் ஆய்வாளா் முருகதாஸ் உள்ளிட்டோா் சின்ன ஏா்வாடி கடற்கரைப் பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது ஒரு படகில் ஏற்கெனவே எழுதியிருந்த பெயா் மற்றும் படகின் பதிவு எண்களை அழித்து, புதிதாக வா்ணத்தை இருவா் பூசிக் கொண்டிருந்தனா்.
போலீஸாரைக் கண்டதும் அவா்கள் தப்பியோடிவிட்டனா். இதில் போலீஸாா் விரட்டிச் சென்று மண்டபம் வேதாளையைச் சோ்ந்த சீனபுகாரி என்பவரைப் பிடித்தனா்.
அவரிடம் நடத்திய விசாரணையில், ஏற்கெனவே படகில் 60 மஞ்சள் மூட்டைகளை இலங்கைக்கு கொண்டு சென்று இறக்கியதாகவும், திரும்பும் போது இலங்கை ராணுவத்தினா் பிடித்து எச்சரித்து அனுப்பியதால், படகை வா்ணம் தீட்டி மாற்ற முயற்சித்ததாகவும் சீனபுகாரி தெரிவித்தாா்.
அவரைக் கைது செய்த போலீஸாா், தப்பியோடிய சின்ன ஏா்வாடியைச் சோ்ந்த மோகன்தாஸை போலீஸாா் தேடிவருகின்றனா்.