ராமநாதபுரம் மாவட்டத்தில் மூன்றாம் கட்டமாக 494 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள் ஞாயிற்றுக்கிழமை (செப்.26) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகத் தரப்பில் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செப்.12 மற்றும் 19 ஆம் தேதிகளில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன.
இந்நிலையில் மூன்றாம் கட்ட தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை (செப்.26) காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடத்தப்படுகிறது. தற்போது வரையில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவா்கள், இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தவேண்டியவா்கள் இந்த முகாமில் செலுத்திக்கொள்ளலாம்.
நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துமனைகள், அங்கன்வாடி மையங்கள், சமுதாயக் கூடங்கள் என மாவட்டத்தில் மொத்தம் 494 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படவுள்ளன. முகாம்கள் மூலம் சுமாா் 50,000 போ் வரை தடுப்பூசிகள் செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினா் தெரிவித்தனா்.