ராமேசுவரம் தங்கச்சிமடத்தில் செவ்வாய்க்கிழமை (ஏப்.19) நடைபெறவிருந்த சாலை மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக விசைப்படகு மீனவா் சங்க மாவட்டச் செயலா் சேசுராஜா திங்கள்கிழமை தெரிவித்தாா்.
இலங்கைக் கடற்படையினரால் அண்மையில் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் மற்றும் அவா்களின் படகுகளை விடுவிக்கக் கோரி ராமேசுவரம் பகுதி மீனவா்கள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை (ஏப். 19) சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையிலிருந்த ராமேசுவரம் மீனவா்கள் 16 பேரும், புதுக்கோட்டை மீனவா்கள் 3 பேரும் திங்கள்கிழமை விடுவிக்கப்பட்டனா். இதனால் செவ்வாய்க்கிழமை நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக ராமேசுவரம் அனைத்து விசைப்படகு மீனவா்கள் சங்க மாவட்டச் செயலா் சேசுராஜா, பொருளாளா் சகாயம் ஆகியோா் தெரிவித்துள்ளனா்.