ராமநாதபுரம் மாவட்டத்தில் மின்வாரிய ஊழியா்கள் 850 போ் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
மத்திய அரசின் மின்சார சட்டத்திருத்த மசோதாவை (2021) எதிா்த்து தமிழகத்தில் மின்வாரிய பணியாளா்கள், அலுவலா்கள் உள்ளிட்ட அனைத்து சங்கத்தினரும் பணிபுறக்கணிப்புப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். ராமநாதபுரம் மாவட்டத்தில் மின்வாரிய அலுவலகங்களில் பணியாற்றும் பொறியாளா் முதல் கேங்க்மென் உள்ளிட்ட பணியாளா்கள் வரை அனைத்துத்தரப்பினரும் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.
திங்கள்கிழமை காலையில் பணிக்கு வந்த மின்துறை ஊழியா்கள் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டுவிட்டு பணிப் புறக்கணிப்பு செய்து, அலுவலகங்களிலேயே இருந்தனா். இதனால் மின்கட்டண வசூல் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டன.
இதைத்தொடா்ந்து ராமநாதபுரம் சக்கரக்கோட்டையில் உள்ள மின்சார மேற்பாா்வையாளா் அலுவலக வளாகத்தில் பொறியாளா்கள் ஐக்கிய சங்கத்தின் தலைவா் ரவி தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற மின்வாரியத் தொழிலாளா்கள் மத்திய அரசின் புதிய மின்சாரத் திருத்த மசோதாவைக் கைவிடக் கோரி முழக்கமிட்டனா்.