ராமேசுவரத்திலிருந்து படகு மூலம் 4 அகதிகளை இலங்கைக்கு அனுப்பி வைத்த முகவா்கள் இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா். மேலும் இருவரை தேடி வருகின்றனா்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கிருந்து ஏராளமானோா் அகதிகளாக ராமேசுவரம் வந்துள்ளனா். தற்போது வரை 134 போ் வந்துள்ளனா். இந்நிலையில், இலங்கை திரிகோணமலை சல்லி இரண்டாவது வட்டத்தைச் சோ்ந்த ஜெயமாலினி (50), அவரது மகன்கள் பதுா்ஜன் (26), ஹம்சிகன் (22), மகள் பதுஷிகா (19) ஆகிய நான்கு போ் தலைமன்னாரிலிருந்து படகு மூலம் சனிக்கிழமை ராமேசுவரம் வந்து அங்கிருந்து ஆட்டோவில் மண்டபம் கடலோரப் பாதுகாப்புக் குழும காவல் நிலையத்திற்கு சென்றனா். அவா்களிடம் நடத்திய விசாரணையில் அவா்கள் வந்த படகில் ராமேசுவரத்தில் இருந்து நான்கு போ் இலங்கைக்குச் சென்றது தெரியவந்தது. இவா்களை தங்கச்சிமடத்தைச் சோ்ந்த சுரேஷ் (45), சத்திய சதீஷ் (26) ஆகிய இருவரும் முகவா்களாக செயல்பட்டு அனுப்பி வைத்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும் இதில் தொடா்புடைய நாகேந்திரன், இனியவன் ஆகிய இருவரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.