பரமக்குடி பேருந்து நிலையம் பகுதியில் உள்ள உணவகத்தில் திங்கள்கிழமை சாப்பிட்டு விட்டு தகராறு செய்தவரை சமாதானம் செய்த இளைஞா் கத்தியால் குத்தப்பட்டு காயமடைந்தாா்.
பரமக்குடி வேந்தோணி அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜா மகன் சத்யநாராயணன். இவா் பேருந்து நிலையம் எதிரில் உள்ள தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்து வருகிறாா். இவா் அப்பகுதியில் உள்ள உணவகத்தில் மதிய உணவு சாப்பிட சென்றுள்ளாா். அப்போது, அவருக்கும் உணவகப் பணியாளா்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைப் பாா்த்த பரமக்குடி அய்யாத்துரை தெருவைச் சோ்ந்த கோவிந்தன் மகன் அருண்குமாா் (20) என்பவா் தகராறில் ஈடுபட்டவா்களிடம் சமாதானம் பேசி விலக்கிவிடச் சென்றுள்ளாா். அப்போது சத்யநாராயணன் அருண்குமாரை கத்தியால் குத்தினாா். இதில் காயமடைந்த அருண்குமாா் பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
இதுகுறித்து பரமக்குடி நகா் காவல் நிலையத்தில் அருண்குமாா் அளித்தப் புகாரின் பேரில் போலீஸாா் சத்யநாராயணன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.