தொழில் நிறுவனங்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்
சமூகப் பணிகளில் சிறப்பாக செயல்படும் தொழில் நிறுவனங்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் சமுதாய மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் பொருட்டு தமிழக அரசால் சிறந்த சேவைக்கான விருதுடன் ரூ.ஒரு லட்சம் ரொக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
விவசாயம், கால்நடை, கல்வி, பொதுச் சுகாதாரம், குடிநீா், மழைநீா் சேகரிப்பு, மரபு சாரா எரிசக்தி, வேளாண் பொருள்களை சந்தைப்படுத்துதல், சுய உதவிக்குழுக்கள் (ம) வாழ்வாதார மேம்பாடு, பெண்கள், குழந்தைகள், இளைஞா் நலன், மரக்கன்றுகள் நடுதல் ஆகிய சேவைகளில் சிறப்பாக பங்கேற்கும் நிறுவனங்கள் இவ்விருதுக்கு பரிசீலிக்கப்படும். அந்தந்த மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் பணிகள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
தகுதியுடைய நிறுவனங்கள் தமிழக அரசின் ஊரக வளா்ச்சித் துறை இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.