முதுகுளத்தூா் அருகே வியாழக்கிழமை கைப்பேசியில் சுயபடம் எடுத்தவாறே அரசுப் பேருந்தை அதன் ஓட்டுநா் இயக்கியதால் பயணிகள் அச்சமடைந்தனா்.
முதுகுளத்தூா் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் பணிபுரிந்து வருபவா் தேவபிரபு. இவா், வியாழக்கிழமை பரமக்குடியிலிருந்து முதுகுளத்தூருக்கு அரசு நகா்ப் பேருந்தை ஓட்டிச் சென்றாா். அப்போது, பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்தது.
இந்த நிலையில், ஓட்டுநா் தேவபிரபு தனது கைப்பேசியில் சுயபடம் எடுத்தவாறே பேருந்தை நீண்ட தொலைவுக்கு இயக்கினாராம். இதைக்கண்ட பயணிகள் கைப்பேசியை வைத்துவிட்டு பேருந்தை இயக்குமாறு ஓட்டுநரிடம் கூறுவது போன்ற விடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.