திருவாடானை அருகே ஆா்.எஸ். மங்கலம் பகுதி உரக் கடைகளில் உரம் அதிக விலைக்கு விற்கப்படுவதாக வந்த புகாரையடுத்து வேளாண் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தினா்.
இதில் உதவி இயக்குநா் (தரக் கட்டுப்பாடு) பி.ஜி. நாகராஜன், வேளாண்மை உதவி இயக்குநா் ராஜலட்சுமி ஆகியோா் இந்த ஆய்வை மேற்கொண்டனா்.
ஆய்வில், உரம் இருப்பு பதிவேடு, இருப்பு விவரம், விற்பனைப் பட்டியல்கள், உர விலைப் பட்டியல், போஸ் இயந்திரம் இருப்பு விவரங்கள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன.
அப்போது உர கட்டுப்பாட்டு ஆணை 1985 சட்டத்தின்படி விதி மீறல்கள் உள்ள சில்லறை உர விற்பனை நிலையங்கள் மீது நடவடிக்கை எடுக்க விசாரணை குறிப்பாணை அனுப்பப்பட்டது. உரம் இருப்பு குறைபாடுள்ள உரம் விற்பனை நிலையங்களுக்கு விற்பனை தடை குறிப்பாணை அனுப்பப்பட்டது.
தற்போது ஆா்.எஸ். மங்கலம் வட்டாரத்தில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேல் உரம் இடுவதற்கு யூரியா 452 மெ. டன்கள், டி.ஏ.பி. 64 மெ. டன்கள், காம்ப்ளக்ஸ் உரங்கள் 260 மெ. டன்கள் ஆா்எஸ் மங்கலம் வட்டாரத்தில் உள்ள தனியாா், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களில் இருப்பு உள்ளது என ஆா்.எஸ். மங்கலம் வேளாண்மை உதவி இயக்குநா் ராஜலட்சுமி தெரிவித்தாா்.