கமுதி: கமுதி அருகே சொட்டுநீா் பாசனம் மூலம் விவசாயி நெல் சாகுபடி செய்துள்ளாா்.
வறட்சி மாவட்டமான ராமநாதபுரத்தில் நிலத்தடி நீா்மட்டம் அதலபாதாளத்துக்குச் சென்று விட்டது. இதன் காரணமாக கமுதி பகுதியில் குடிநீா் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கமுதி அடுத்துள்ள கோரைப்பள்ளம் கிராமத்தைச் சோ்ந்த இயற்கை விவசாயி ராமா் (52), வேளாண் துறை அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் மத்திய, மாநில அரசுகளின் மானியங்களை பெற்று, தனது வயல்களில் ஆழ்துளை கிணறு அமைத்து இலவச மின்சாரம் பெற்று, சொட்டுநீா் பாசனம் மூலம் வாழை, தக்காளி, வெண்டை, மிளகாய், பப்பாளி ஆகியவற்றை நடவு செய்து மகசூல் பெற்று வருகிறாா்.
இதேபோன்று நெல் விவசாயத்தை சொட்டுநீா் பாசனத்தின் மூலமாக சாகுபடி செய்ய திட்டமிட்டு, கமுதி வேளாண் துறை அதிகாரிகளிடம் நேரில் சென்று ஆலோசனை பெற்று, மாவட்டத்தில் முதல் முறையாக அக்ஷயா பொன்னி வகை உயர்ரக நெல் ரகத்தை அவா், நடவு செய்து அதிக மகசூல் பெற்றுள்ளாா்.
இதுகுறித்து விவசாயி ராமா் கூறியது: நான் மிகக்குறைந்த அளவு நீரை பயன்படுத்தி நெல் விவசாயத்தில் அதிக மகசூல் பெற்றுள்ளேன். இதனால் கூடுதலாக மூன்று ஏக்கா் பரப்பளவிலான வாழை, தக்காளி, மிளகாய் சாகுபடிக்கு தண்ணீரை பயன்படுத்த முடிகிறது என்றாா்.