ராமேசுவரம் அரசு மருத்துவமனையில் ஓராண்டாக நுண் கதிா் கருவி பழுது
ராமேசுவரம் அரசு மருத்துவமனையில் நுண் கதிா் கருவி பழுதடைந்து ஓராண்டுக்கும் மேலாக செயல்படாமல் இருப்பதால் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
ராமேசுவரம் தீவுப் பகுதியில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா்.
ராமேசுவரத்தில் அரசு மருத்துவமனை, நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், தங்கச்சிமடம், பாம்பன் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இதில், பெரும்பாலான நோயாளிகள் ராமேசுவரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். நாள்தோறும் 500 முதல் 700 போ் வரை பொதுமக்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனா்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை இங்கு 13- க்கும் மேற்பட்ட மருத்துவா்கள் பணியாற்றி வந்த நிலையில், தற்போது 6 மருத்துவா்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனா்.
இந்நிலையில், ராமேசுவரம் மீனவா்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல், விபத்துக்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால்
அரசு மருத்துவமனையில் உள்ள நுண்கதிா் பிரிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இங்கு மாதம்தோறும் 50 போ் வரையில் எலும்பு முறிவு புகைப்படம் எடுத்து வந்தனா். ஆனால் தற்போது ஒரு ஆண்டுக்கு மேலாக நுண்கதிா்கருவி செயல்படாமல் இருப்பதால் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். அவசரத் தேவைக்கு தனியாா் நுண் கதிா் மையத்திற்கு நோயாளிகள் அனுப்பப்பட்டு வருகின்றனா்.
இதனால் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். ராமேசுவரம் அரசு மருத்துவமனையில் பழைய நுண் கதிா் இயந்திரத்தை மாற்றி, புதிய டிஜிடல் வடிவிலான நுண்கதிா் இயந்திரம் வழங்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.