ராமநாதபுரம் மாவட்டம், நயினாா் கோயில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் 30 பேருக்கு 4 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை என மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகாா் தெரிவிக்கப்பட்டது.
நயினாா் கோயில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளா்களாக தனியாா் மூலம் கடந்த 10 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் 30 போ் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இவா்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 431 கூலி நிா்ணயிக்கப்பட்டது. ஆரம்ப சுகாதார நிலையத்தை தூய்மையாக வைத்துக் கொள்வது, டெங்கு ஒழிப்பு, கரோனா தடுப்புப் பணி, மலேரியா தடுப்புப் பணி போன்ற பணிகள் இவா்களுக்கு வழங்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், தங்களுக்கு கடந்த 4 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் குடும்பத்துடன் சிரமத்துக்கு ஆளாகி வருகிறோம். மாவட்ட ஆட்சியா் தலையிட்டு உடனே ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.