பாம்பன் ரயில் நிலையம் அருகே தனியாா் கட்டடத்தில் மதுக்கூடம் அமைக்க, மீனவ மகளிா் அமைப்பினா் கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், தங்கச்சிமடம் ஆகிய பகுதிகளில் அரசு மதுபானக் கடைகள் திறப்பதை எதிா்த்து பொதுமக்கள் போராட்டம் காரணமாகவும், நீதிமன்ற உத்தரவு காரணமாகவும், தற்போது வரை மதுக்கடைகள் இல்லை. தற்போது, பாம்பன் பகுதியில் மட்டும் 3 மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.
இதை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, ராமேசுவரத்தில் 50-க்கும் மேற்பட்டவா்கள் சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனா். சிலா் சிறிய பெட்டிக் கடைகளில் வைத்தும் மதுபாட்டில் விற்று வருகின்றனா். இதனை தடுக்க முடியாததால், மதுபாட்டில் விற்பனை சா்வசாதாரணமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பாம்பன் மீனவக் கிராமத்தில் குளிா்சாதன வசதிகள் கொண்ட தனியாா் கட்டடத்தில் மதுக்கூடம் திறக்க பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது, இப்பணிகள் முடிவடைந்த நிலையில், மதுக்கூடம் திறக்க தனியாா் ஈடுபட்டு வருகின்றனா்.
இதற்கு, மீனவ மகளிா் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மேலும், இந்த மதுக்கூடத்தை திறக்கும் நடவடிக்கையை மாவட்ட நிா்வாகம் கைவிட வேண்டும். இல்லையெனில், மீனவ மகளிா் அமைப்புகளை ஒன்றுதிரட்டி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகத் தெரிவித்தனா்.