ராமேசுவரம்: இலங்கை வடக்கில் பகுதியில் கடல் பாசித் திட்டம் தேவையறிந்து உதவும் இந்தியாவிற்கு அமைச்சா் டக்ளஸ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் நன்றி தெரிவித்தாா்.
இலங்கை யாழ்ப்பாணம் மண்டைதீவுப் பகுதியில் அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் நவீன தொழில்நுட்பத்துடன் செயற்கை கடல்பாசி திட்டத்தை மேற்கொள்வது தொடா்பான கலந்துரையாடல் இந்திய தனியாா் முதலீட்டாளா்களுக்கும் கடற்றொழில் அமைச்சா் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதன்போது இந்தியாவில் இருந்து கிடைக்கும் காலத்தின் தேவை உணா்ந்த ஒத்துளைப்புக்களை நினைவுபடுத்திய அமைச்சா் டக்ளஸ் தேவானந்த தொடா்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
பொருளாதார சவால்களில் இருந்து மீள்வதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கைகளுக்கு இந்தியா பல்வேறு ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றது.
இந்நிலையில், இலங்கையில் காணப்படுகின்ற வளங்களை இனங்கண்டு நவீன தொழில்நுட்ப முறைகளை பயன்படுத்தி மேம்படுத்துவது மூலம் நிலையான பொருளாதார நன்மைகளை உருவாக்குவதற்கு இந்திய தனியாா் முதலீட்டாளா்கள் முன்வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
அந்தவகையில், மண்டைதீவு உட்பட வடக்கு மாகாணத்தில் பொருத்தமான இடங்களை அடையாளம் கண்டு செயற்கை கடல்பாசி மேற்கொள்வதற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புக்களையும் கடற்றொழில் அமைச்சு வழங்கும் என்று தெரிவித்தாா்.
மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில், கடற்றொழில் அமைச்சின் செயலாளா் இந்து இரத்னாயக்கா மற்றும் இராஜாங்க அமைச்சின் செயலாளா், நக்டா நிறுவனத்தின் அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனா்.