மன்னாா் வளைகுடா உள்ளிட்ட கடல் பகுதியில் மணிக்கு 50 கிலோ மீட்டா் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததை அடுத்து மீனவா்களுக்கு புதன்கிழமை மீன்பிடிப்பதற்கான அனுமதி சீட்டு வழங்கப்படவில்லை. இதனால் 1,200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டன.
மன்னாா் வளைகுடா, பாக்நீரிணை உள்ளிட்ட கடல் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை முதல் மணிக்கு சுமாா் 40 முதல் 50 கிலோமீட்டா் வேகத்தில் காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்தது. இதையடுத்து ராமேசுவரம், மண்டபம், பாம்பன் ஆகிய மீன்பிடி துறைமுகங்களிலிருந்து 1200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவா்களுக்கு, மீன்வளத்துறை அதிகாரிகள் அனுமதி சீட்டு வழங்கவில்லை. இதனால் விசைப்படகுகள் அந்தந்த துறைமுகங்களில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் நாட்டுப்படகு மீனவா்களும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளதோடு, தங்களுடைய படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைக்கவும், அறிவித்தியுள்ளனா்.
மீனவா்கள் கடலுக்குச் செல்லாததால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஐந்து கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவா்கள் தெரிவிக்கின்றனா்.