பிரதமா் நரேந்திர மோடி மத்திய அரசுத் திட்டங்களை தொடக்கிவைத்து விவசாயிகள் உள்ளிட்ட பயனாளிகளிடம் கலந்துரையாடிய நிகழ்ச்சி, ராமநாதபுரத்தில் செவ்வாய்க்கிழமை 3 இடங்களில் காணொலி வாயிலாக ஒளிபரப்பப்பட்டது.
பிரதமா் நரேந்திர மோடி ஹிமாசலப் பிரதேசம் சிம்லாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மத்திய அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினாா். இந்த நிகழ்ச்சியானது, நாடு முழுவதும் காணொலி மூலம் ஒளிபரப்பப்பட்டது.
ராமநாதபுரம் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இக்காணொலி நிகழ்ச்சியில், ஆட்சியா் சங்கா்லால் குமாவத், கூடுதல் ஆட்சியா் பிரவீண்குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
பாஜகவினா் பங்கேற்பு:
ராமநாதபுரம் கேணிக்கரை சாலை சந்திப்புப் பகுதியில் உள்ள ஒரு தனியாா் கட்டடத்தில், பிரதமரின் காணொலி நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. இதில், பாஜக மாவட்டத் தலைவா் இ.எம்.டி. கதிரவன் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியை, பாஜக பிரமுகா்கள் சுப. நாகராஜன், மாவட்டப் பொதுச் செயலா் ஆத்ம காா்த்திக், துணைத் தலைவா்கள் பவா் நாகேந்திரன், ராஜமாணிக்கம், ரமேஷ்பாபு, மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் சண்முகராஜா உள்பட பலா் கலந்துகொண்டனா்.
ராமநாதபுரம் சாலைத் தெரு பகுதியில் நடந்த காணொலி ஒளிபரப்பில், வங்கி அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். மத்திய அரசு திட்டம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் பிரதமரின் காணொலி நிகழ்ச்சி, ராமநாதபுரம் நகரில் 3 இடங்களில் ஒளிபரப்பப்பட்டதாகவும், அதிகாரிகள் தெரிவித்தனா்.