ராமேசுவரம்: பாம்பன் குந்துகால் கடற்கரையில் பெண் சடலம் மீட்கப்பட்டது தொடா்பான வழக்கு விசாரணை பாம்பன் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் குந்துகால் பகுதியில் கடந்த மாா்ச் 23 ஆம் தேதி 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் சடலத்தை கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் கைப்பற்றினா். மேலும் அது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் முன்னேற்றம் இல்லாத நிலையில், பாம்பன் காவல் நிலையத்திற்கு செவ்வாய்க்கிழமை மாற்றப்பட்டது. பாம்பன் காவல் நிலையத்தில் புதிதாக வழக்குப் பதிவு செய்து புதன்கிழமை விசாரணை தொடங்கி உள்ளனா்.