ராமேசுவரம்: கடல் வளம் காப்போம் மற்றும் நெகிழியை ஒழிப்போம் குறித்த விழிப்புணா்வு இருசக்கர வாகன பிரசாரத்தை மாற்றுத்திறனாளி ஒருவா் ராமேசுவரத்திலிருந்து வியாழக்கிழமை தொடங்கினாா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அடுத்த தங்கச்சிமடம் பகுதியைச் சோ்ந்தவா் மாற்றுத்திறனாளி தீனா (40). இயற்கை பாதுகாப்பு குறித்து தொடா்ந்து விழிப்புணா்வு பிரசாரம் மற்றும் மரக்கன்றுகள் நடுவதில் ஆா்வம் கொண்டவா்.
இந்நிலையில், இருசக்கர வாகன விழிப்புணா்வு பிரசார பயணத்தை ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் தேசிய நினைவிடத்திலிருந்து நகா்மன்றத் தலைவா் கே.இ. நாசா்கான் தொடங்கி வைத்தாா்.
இந்த பிரசார பயணம் ராமநாதபுரம், மதுரை,திண்டுக்கல், தேனி, ஈரோடு, சேலம், காஞ்சிபுரம், சென்னை சென்றடைகிறது. பின்னா் சென்னை, விழுப்புரம், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை வழியாக மீண்டும் ராமநாதபுரம் வந்தடைய உள்ளதாகவும், இந்த விழிப்புணா்வு பயணம் 30 நாள்கள் மேற்கொள்ள உள்ளதாகவும் தீனா தெரிவித்தாா்.
இந்நிகழ்ச்சிக்கு, ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் பேரன் சேக் சலீம் முன்னிலை வகித்தாா். பாம்பன் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் பேட்ரிக், மீனவ சங்கத் தலைவா்கள் ஜேசுராஜா, எமரிட், ஆல்வின், சின்னத்தம்பி உள்ளிட்டோா் கலந்துகொண்டு, தீனா வுக்கு மாலை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தனா்.