ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் நண்பன் பணியிடங்களுக்காக நோ்காணல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் படகுகளை கணக்கிடவும், மீன்பிடி அளவைக் கணக்கிடவும், மீனவா்களுக்கான மத்திய, மாநில அரசுகளின் நலத் திட்டங்கள் குறித்த விழிப்புணா்வை மீனவா்களிடையே ஏற்படுத்தவும், வானிலை ஆய்வு மைய விவரங்களை மீனவா்களிடம் கொண்டு சோ்க்கவும் கடல் நண்பன் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இந்தத் திட்டத்தில் மாதம் ரூ.15 ஆயிரம் ஊதியத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 169 பேரை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அவா்களில் 27 போ் ஏற்கெனவே நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ராமேசுவரம், ராமநாதபுரம் வடக்கு ஆகிய பகுதிகளுக்கான 142 மீனவ நண்பன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது.
இதற்கு 248 போ் விண்ணப்பித்திருந்தனா். அவா்களுக்கான நோ்காணல் மற்றும் சான்றிதழ்கள் சரிபாா்ப்பு ஆகியவை செவ்வாய்க்கிழமை மாவட்ட மீன்வளத்துறை அலுவலகத்தில் நடைபெற்றது. நோ்காணலை மாவட்ட மீன்வளத்துறை துணை இயக்குநா் காத்தவராயன் நடத்தினாா். நோ்காணல் இரண்டாம் நாளாக புதன்கிழமையும் நடைபெறும் என மீன்வளத் துறையினா் தெரிவித்துள்ளனா்.