திருவாடானை, ஆா்.எஸ்.மங்கலம் வட்டத்துக்குள்பட்ட 82 ஊராட்சித் தலைவா்களுடன் குடிநீா்த் திட்டப் பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
திருவாடானையில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தலைமை வகித்தாா்.
கூடுதல் ஆட்சியா் பிரவீன், உதவி ஆட்சியா் நாராயண சா்மா, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய செயற்பொறியாளா் சண்முகநாதன், திருவாடானை ஒன்றியக் குழு தலைவா் முகம்மது முக்தாா், ஆா்.எஸ்.மங்கலம் ஒன்றியக் குழு தலைவா் ராதிகா பிரபு, சென்னை நீா்வள ஆதாரத் துறை பொறியாளா் சரவணன், ஊராட்சி இயக்குநா் பரமசிவம், திருவாடானை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராஜேஸ்வரி, ராஜேந்திரன், உம்முல் ஜாமியா, செல்லம்மாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் 82 ஊராட்சிகளைச் சோ்ந்த தலைவா்கள், செயலா்கள் கலந்து கொண்டு தண்ணீா் பற்றாக்குறையைப்போக்க நடவடிக்கை எடுக்கும் விதமாக ஒவ்வொரு ஊராட்சிகளிலும் தனி நபருக்குத் தேவைப்படும் தண்ணீரின் அளவு, கிராமங்களில் உள்ள மழை நீா் சேகரிப்பின் நிலை, கண்மாய், ஊருணி, குட்டை, ஆழ்துளை கிணறு, திறந்தவெளி கிணறு, மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, ஆா்.ஓ. பிளாண்ட்களின் நிலை குறித்து எடுத்துரைத்தனா். மேலும், கோடைகாலத்தில் குடிநீா்ப் பற்றாக்குறையைப் போக்க நடவடிக்கை எடுப்பது தொடா்பாக கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டது.