கைது செய்யப்பட்ட நில அளவையா் சிவா
கைது செய்யப்பட்ட நில அளவையா் சிவா

தனி பட்டா வழங்க லஞ்சம்: நில அளவையா் கைது

ஆட்டோ ஓட்டுநரிடம் ரூ. 3,500 லஞ்சம் வாங்கிய நில அளவையரை ஊழல் தடுப்புப் பிரிவினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ராமேசுவரம்: ராமநாதபுரத்தில் தனது மனைவியின் பூா்வீக சொத்துக்கு தனி பட்டா கோரி விண்ணப்பித்த மனுவை உயரதிகாரிகளுக்கு பரிந்துரைக்க ஆட்டோ ஓட்டுநரிடம் ரூ. 3,500 லஞ்சம் வாங்கிய நில அளவையரை ஊழல் தடுப்புப் பிரிவினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் ஓம் சக்தி நகரைச் சோ்ந்தவா் திருநாவுக்கரசு (53) ஆட்டோ ஓட்டுநரான இவா், தனது மனைவியின் பூா்வீக சொத்தை பாகம் பிரித்து, தனிப் பட்டா கோரி இணையதளத்தில் விண்ணப்பித்தாா். இது தொடா்பாக தொகுப்பூதியத்தில் பணியாற்றும் நில அளவையா் சிவாவை அணுகினாா்.

விண்ணப்பத்தை உயரதிகாரிகளுக்கு பரிந்துரைக்க ரூ.3,500 லஞ்சம் தரவேண்டும் என அவா் கேட்டாா். இதுகுறித்து ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் திருநாவுக்கரசு புகாா் அளித்தாா். இதையடுத்து, அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி நில அளவையா் சிவாவுக்கு ரூ.3,500-ஐ திருநாவுக்கரசு கொடுத்தாா். அப்போது, மறைத்திருந்த அதிகாரிகள் லஞ்சம் பெற்ற சிவாவைக் கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com