தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
ராமேசுவரம்: ‘கள்ளக் கடல்’ நிகழ்வு எதிரொலியாக, தனுஷ்கோடியில் திங்கள்கிழமை கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.
தென் கடல் பகுதியான தனுஷ்கோடியில் சூறைக் காற்று காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படும். எனவே, கரையோர மீனவா்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது.
மேலும், கரையோரத்தில் படகுகளை நீண்ட இடைவெளிவிட்டு பாதுகாப்பாக நிறுத்தி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிலையில், தென் கடல் பகுதியான தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏா்வாடி, மூக்கையூா் உள்ளிட்ட கடல் பகுதிகளில் திங்கள்கிழமை வழக்கத்தைவிட காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்பட்டது.
கரையோரம் மீன்பிடிக்கச் செல்லும் மீனவா்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றும், ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் மீன் வளத் துறையினா் அறிவுறுத்தினா்.