புது தில்லியில் தொடர் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாயத் தொழிலாளர் நலச் சங்கத்தின் சிவகங்கை மாவட்டக் கிளை சார்பாக, விவசாயிகள் பாடை கட்டியும், சங்கு ஊதியும், சாலை மறியல் செய்தும் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூட்டுறவுக் கடன் சங்கங்களில் விவசாயிகள் பெற்ற கடனை முழுவதும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிவகங்கை மாவட்டத்தின் தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் விவசாயத் தொழிலாளர் நலச் சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள், கடந்த 4 நாள்களாக தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தின் 5-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற தொடர் காத்திருப்பு போராட்டத்தில், புதுதில்லியில் கடந்த 38 நாள்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், அவர்களை சந்தித்துப் பேசாத பிரதமர் நரேந்திர மோடியை கண்டித்தும், பாடை கட்டியும், சங்கு ஊதியும், சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ். குணசேகரன் தலைமை வகித்தார்.விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலச் செயலர் முத்துராமலிங்கம், துணைச் செயலர் சாத்தையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் தங்கமணி, மாவட்டத் துணைச் செயலர் கே. கோபால், உள்பட பலரும் கலந்துகொண்டனர்.
பின்னர், அனைத்து விவசாயிகளும் சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது, சிவகங்கை நகர் போலீஸார் 43 பெண்கள் உள்பட 206 விவசாயிகளை கைது செய்து, மாலையில் அனைவரையும் விடுவித்தனர்.