அரசு நிதி ரூ.49 லட்சத்து 67 ஆயிரத்தை கையாடல் செய்ததாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். மேலும், ஊராட்சி செயலர்கள் 5 பேர் மீது போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட படமாத்தூர், இலுப்பகுடி, குடஞ்சாடி, முடிகண்டன், அரசனிமுத்துபட்டி ஆகிய 5 ஊராட்சிகளின் நிதி பரிவர்த்தனை குறித்து ஒன்றிய ஆணையாளர் பர்ணபாஸ் அந்தோணி தலைமையிலான அலுவலர்கள் ஆய்வு செய்தனர். இதில் 5 ஊராட்சிகளிலும் கடந்த 08-01-2016 முதல் 15-05-2017 வரை நிதிகளில் முறைகேடு நடந்துள்ளது தெரியவந்தது.
தொடர் விசாரணையில் குறிப்பிட்ட காலத்தில், இந்த ஊராட்சிகளுக்கு துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றிய சங்கரன், ஊராட்சி செயலர்கள் அங்காளஈஸ்வரி(படமாத்தூர்), ராஜா(இலுப்பக்குடி), கிருஷ்ணன் (குடஞ்சாடி), மாரிமுத்து(முடிகண்டம்), ஞானப்பிரகாசம் (அரசனிமுத்துபட்டி) ஆகியோர் ஊராட்சிகளுக்கு சேர வேண்டிய ரூ.49 லட்சத்து 67ஆயிரத்து 84 நிதியை வட்டார வளர்ச்சி அலுவலர் அனுமதி வழங்கியது போல், போலி அனுமதி கடிதம் தயாரித்து கையாடல் செய்திருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து பர்ணபாஸ் அந்தோணி கொடுத்த புகாரின் பேரில் சிவகங்கை நகர் காவல் ஆய்வாளர் மோகன், சார்பு -ஆய்வாளர் சக்திவேல் ஆகியோர் சங்கரனை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். சம்பந்தப்பட்ட 5 ஊராட்சிகளின் செயலர்கள் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.