மணல் தட்டுப்பாடு காரணமாக கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பாஜக தேசிய பொதுச் செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ராஜகம்பீரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த கட்சி பிரமுகர் இல்ல விழாவில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பெங்களூர் சிறையில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள புகாரில் கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்.
கடந்த 50 ஆண்டுகளில் தமிழகம் மிகவும் பின்தங்கிப்போய் விட்டது. ஆன்லைன் மூலம் மணல் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
மணல் தட்டுப்பாட்டால் கட்டுமானத் தொழில் பாதிக்கப்பட்டு ஏராளமான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரம், மத்தியப்பிரதேசம் போன்று தமிழகத்திலும் விவசாயிகளின் கடன்களை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார்.
பேட்டியின்போது பாஜக மாவட்டத் தலைவர் சொக்கலிங்கம், மாவட்ட முன்னாள் துணைத் தலைவர் கே.கருப்பையா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.