இளையான்குடி அருகே மயிலை வேட்டையாடிய 3 பேரை நாட்டுத் துப்பாக்கியுடன் வனத் துறையினர் திங்கள்கிழமை கைது செய்தனர்.
இளையான்குடி அருகே உள்ள பெத்தனேந்தல் கிராமத்தில் உள்ள கண்மாய் பகுதிகளில் திங்கள்கிழமை அதிகாலை சிலர் வேட்டையாடுவதாக சிவகங்கை மாவட்ட வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து,வனவர் செல்வமணி, வனக் காப்பாளர் மலைச்சாமி, வனக் காவலர் தங்கச்சாமி ஆகியோர் சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையில், விழுப்புரம் மாவட்டம் கல்குறிச்சியை சேர்ந்த கார்த்திக்(30), ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த பாண்டி(35) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த முனியசாமி (28) ஆகியோர் நாட்டு துப்பாக்கியுடன் மயில்களை வேட்டியாடிக் கொண்டிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து மூவரையும் வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து வேட்டையாடப்பட்ட மயில் மற்றும் நாட்டு துப்பாக்கி, ஒளிவீசும் விளக்குகளையும் பறிமுதல் செய்தனர்.